தூத்துக்குடி – மார்ச் – 25,2025
Newz – Webteam



திருச்செந்தூரில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் சார்பாக திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் சைபர் குற்றங்கள் குறித்த QR code விழிப்புணர்வு டிஜிட்டல் போர்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப இன்று (25.03.2025) பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி, அதை ஸ்கேன் செய்வதன் மூலம் அதில் உள்ள பயன்கள் மற்றும் சைபர் புகார்கள் எவ்வாறு அளிப்பது என்பது குறித்தும் தெளிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், சைபர் குற்ற எண் 1930 மற்றும் cybercrime.gov.in என்ற சைபர் இணையதளம் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வைத்து சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும், பெண்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், ஸ்காலர்ஷிப் மோசடி போன்ற பல்வேறு சைபர் குற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் செய்தனர். மேலும் மேற்படி நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உட்பட காவல்துறையினர், சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியின் கல்வி மேலாளர் வெங்கட்ராமன், சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் வைஸ்லின் ஜிஜி மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments