இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் பறிமுதல்: டிரைவர் கைது



தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் போலீஸ் உட்கோட்டம், ஆறுமுகநேரி போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட காயல்பட்டினம் வாவு காலேஜ் எதிரே உள்ள கடற்கரைக்குச் செல்லும் சாலையில் கடத்தல் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில், எஸ்ஐக்கள் ராமசந்திரன், பிரம்ம நாயகம், சிறப்பு எஸ்ஐ ராமர் மற்றும் தலைமைக் காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சி ராஜா, கேப்ரியல் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இன்று (26.01.26) அதிகாலை சுமார் 03.15 மணியளவில் அந்த வழியாக வந்த ஐச்சர் லோடு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக 60 மூட்டைகளில் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் மொத்தம் 1800 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த சாத்தான்குளம் சௌந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மகன் கற்பக ராஜேஸ்வரன் (40) என்பவரை போலீசார் பிடித்தனர். போலீசார் வருவதை அறிந்த மற்ற நபர்கள் பைபர் படகுடன் தப்பியோடிவிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிடிபட்ட கற்பக ராஜேஸ்வரன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் பீடி இலை மூட்டைகள் ஆகியவை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.


0 Comments